அஸ்ஸாமில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் திப்ருகார் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், போராட்டம் தீவிரமடைந்தது. மேலும், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பின்னர் போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார் இறுதியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுளையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
முன்னதாக, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த திரிபுரா முழுவதும், செல்லிடை பேசி இணைய சேவை மற்றும் குறுஞ் செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது.