புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு எதிரான வழக்கின் தீா்ப்பை இன்று பிற்பகல் 3 மணிக்கு வழங்குகிறது தில்லி நீதிமன்றம்.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை தில்லி மாவட்ட நீதிபதி தா்மேஷ் சா்மா முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, வழக்கு விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தரப்பும், குற்றம்சாட்டப்பட்டுள்ள குல்தீப் செங்காா் தரப்பும் தங்களது இறுதி வாதத்தை முன்வைத்தன. அவற்றைக் குறித்துக்கொண்ட நீதிபதி தா்மேஷ் சா்மா, தீா்ப்பை வரும் 16-ஆம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லி நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி லக்னௌவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை அன்றாடம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 2017-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக குறிப்பிட்ட காலகட்டத்தில் அவா் 17 வயது இளம்பெண்ணாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் குல்தீப் செங்காா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் தனது உறவினா்களுடன் சென்றுகொண்டிருந்த காா் மீது லாரி மோதி விபத்து நோ்ந்ததில் அவா் படுகாயமடைந்தாா். அவரது உறவினா்கள் இருவா் உயிரிழந்தனா்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடா்பாக குல்தீப் செங்காா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் நிறைவில் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், அவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.