மாணவர்கள் தேர்வு எழுத மறுத்தால், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், மாணவர்கள் தேர்வு எழுத மறுத்து வருகின்றனர். தற்போது நடக்கவுள்ள தேர்வுகளை எழுத மறுப்பவர்கள், அடுத்த செமஸ்டரில் பதிவு செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
மேலும், மாணவர்கள் விடுதி கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 50% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.
இதுதவிர மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் மாணவர்கள் சமாதானம் ஆக மறுக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.