சி-வோட்டர்ஸ் மற்றும் ஐ.ஏ.என்.எஸ். கருத்துக் கணிப்பின்படி தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கு 66 சதவிகித மக்களின் ஆதரவு உள்ளது என தெரிவித்துள்ளது.
எந்த ஜனநாயகத்திலும் ஒரு கருத்தும், அதற்கான எதிர்கருத்தும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில் என்.ஆர்.சி. தொடர்பாக சி-வோட்டர்ஸ் மற்றும் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 3,000 நபர்களிடம் கடந்த 17-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை கருத்துக் கணிப்பை நடத்தியது.
இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 500 பேரிடமும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் 500 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது. இந்தக் கருத்து கணிப்பின்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக 65.4 சதவிகிதம் மக்கள் ஆதரவளிக்க, 28.3 சதவிகித மக்கள் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். போலவே, இஸ்லாமிய சமூகத்தில் 66 சதவிகித மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக இருப்பதாக சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கிழக்கு மாநிலங்களில் உள்ள 57.3 சதவிகிதம் மக்களும், மேற்கு மாநிலங்களில் 64.2 சதவிகிதமும், வட மாநிலங்களில் 67.7 சதவிகிதம் மக்களும், தென் இந்தியாவில் 58.5 சதவிகிதம் மக்களும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல, வங்கதேச சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேற விரும்புவதாக மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு 61.4 சதவிகிதம் மக்கள் இந்தியாவில்தான் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் உள்ளது என்றும், 23.8 சதவிகிதம் மக்கள் தங்களுடைய நாடான வங்கதேசத்தில் பல இன்னல்களுக்கு உள்ளாவதால் இந்தியாவில் குடியேற விரும்புகிறோம் என்றும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.