மங்களூரு: மங்களூருவில் வன்முறைப் போராட்டம் வெடித்துவரும் நிலையில், பொதுச் சொத்துக்களை சூறையாடும் வன்முறையாளர்களின் விடியோக்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
மங்களூரு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்த விடியோக்கள் இன்று பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பனிரெண்டுக்கும் மேற்பட்ட விடியோக்களும், தொலைபேசி உரையாடல்களும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விடியோக்களில், முகத்தை மூடியபடி சில போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியும், சாலைகளை மறித்தும், சாலைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மங்களூருவில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு காவல்துறை ஆணையர் பி.எஸ். ஹர்ஷா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்த விடியோக்கள் அனைத்தும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முஸ்லிம் அமைப்பினரும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருவோரும், ஒரு தரப்பு விடியோவை மட்டுமே காவல்துறை வெளியிட்டிருப்பதாக விமரிசித்துள்ளனர்.