
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டேவை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறிய புணே நீதிமன்றம் கைது நடவடிக்கையை ரத்து செய்தது.
பீமா கோரேகான் வழக்கில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டேவை புணே போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர் பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டேவை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்சநீதிமன்றத்தின் படி அவரை கைது செய்வதற்கான தடை உத்தரவு பிப்ரவரி 11-ஆம் தேதி வரை அமலில் உள்ளது என்று தெரிவித்து புணே நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆனந்த் தெல்தும்ப்டே விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, இதே புணே நீதிமன்றத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே நேற்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் புணே நீதிமன்றம் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விவரம்:
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்வலர்கள், வன்முறையைத் தூண்டும் விதமாகவும், வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கிலும் பேசியதாலேயே வன்முறை ஏற்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மீது புணே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யுமாறு தெல்தும்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது. அதேசமயம், அவரைக் கைது செய்யத் தடை விதித்திருந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.