மும்பை: 3 ஆண்டுகளுக்கு மேல் இட்லி, உப்புமா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றை மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை 3 அல்லது 4 ஆண்டுகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியை டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டு பிடித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இட்லி உப்புமா, டோக்ளா போன்றவற்றை வேக வைத்த உணவுப் பொருட்களை எந்தவித கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் அப்படியே 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பதற்கான பீம் ரேடியேசன் என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்க முடியும் என்றும், இந்த ஆய்வுக்காக குறைந்த அளவு கொண்ட எண்ணெய்ப் பொருள், புரோட்டீன் உள்ள உணவு பொருட்களையே தேர்ந்தெடுத்ததாகவும், 2013 ஆம் ஆண்டு முதல் பல உணவு பொருட்களை சோதனை செய்தோம், ஆனால் இட்லி, உப்புமா, டோக்ளா போன்றவற்றை வேக வைத்த உணவுப் பொருட்களில் மட்டுமே சிறந்த முடிவுகள் கிடைத்தாக வைஷாலி தெரிவித்தார்.
சமைத்த உணவில் முதல் முறையாக எலக்ட்ரான் பீம் கதிர்வீச்சு என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.
இந்த தொழில்நுட்பம் இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் அளிக்கப்படும் பேக்கேஜிங் உணவுகளுக்கும், விண்வெளி ஆய்வாளர்கள், ராணுவத்தினருக்கும் இந்த தொழில்நுட்பம் பலன் தரும் என்றும் டாக்டர் வைஷாலி தெரிவித்தார்.