ஹைதராபாத்: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காதலர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான நாளாக உள்ளது. பூக்கள், இனிப்புகள் கொடுத்து காதலர்கள் காதலர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள மிகப் பிரபலமான ஜோதிடர்கள் எல்லாம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் பிஸியாக உள்ளார்கள். காதலர் தினத்தன்று திருமணம் செய்வது தொடர்பாக மட்டும் அல்ல, அன்றைய தினம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா, பிப்ரவரி 14ம் தேதி நல்ல நேரம் எப்போது என்பது போன்ற பல்வேறு கேள்விகளோடு தம்பதிகள் ஜோதிடரை அணுகுகிறார்களாம்.
சிசேரியன் என்று அறிவிக்கப்பட்ட தம்பதிகள், வேறு ஒரு நாளைத் தவிர்த்து, காதலர் தினத்தன்று குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.
இது மட்டுமா, இன்னும் பிரசவ காலம் நெருங்காத சில தம்பதிகளும், பிப்ரவரி 14ம் தேதி சிசேரியன் செய்து கொள்ளலாமா என்று மருத்துவர்களைக் கேட்பதாகவும், இதற்கு மருத்துவர்கள் நோ சொல்லி விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல, ஒரு வார காலத்துக்குள் பிரசவ காலம் இருந்து, அவர்களுக்கு சிசேரியன் செய்வதாக இருந்தால், தம்பதியரின் கோரிக்கையை ஏற்று காதலர் தினத்தன்று சிசேரியன் செய்வது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கிறோம் என்கிறார்கள் ஒரு சில டாக்டர்கள்.
ஆனா, இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம், இதற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. பெற்றோரை கண்டித்து, சுகப்பிரசவத்துக்குக் காத்திருக்குமாறு கூறும் மருத்துவர்களும் உண்டு.