பழங்குடியினர் உரிமையைக் காப்பாற்றுங்க: ஒடிஸா ஆளுநரிடம் பாஜக மனு 

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பழங்குடியினர் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநில பாஜக சார்பில் ஒடிஸா ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 
பழங்குடியினர் உரிமையைக் காப்பாற்றுங்க: ஒடிஸா ஆளுநரிடம் பாஜக மனு 

புவனேஷ்வர்: உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பழங்குடியினர் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநில பாஜக சார்பில் ஒடிஸா ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி, டிசம்பர் 31, 2005 க்கு முன் 3 தலைமுறைகளாக வனப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு அந்த நிலங்களுக்கான உரிமையை வழங்கவேண்டும். 

இந்த சட்டத்தை எதிர்த்து வன ஆர்வலர்கள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தரப்பில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலங்களுக்கு பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த சட்டம் வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.    

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரது அமர்வு முன் கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மொத்தம் 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் பட்டா நிராகரிக்கப்பட்டுள்ளதாக 17 மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன. 

இதையடுத்து, பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களை ஜூலை 12-ஆம் தேதிக்குள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு செயற்கைக்கோள் படத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய வனத்துறை ஆய்வு மையத்தை அறிவறுத்தியுள்ளது.  இதனால், பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பழங்குடியினர் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநில பாஜக சார்பில் ஒடிஸா ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக எதுவும் செய்வோம் என்று ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.

அதேசமயம் மாநில பாஜ துணைத்தலைவரான சமீர் மெஹந்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கல் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் ஜூலை 27 ஆம் தேதிக்கு விசாரணை வரவுள்ள நிலையில், அதற்குள் தலையிட்டு பழங்குடியினரின் உரிமைகளை காப்பாற்றுமாறு மாநில ஆளுநர் கணேஷ் லாலிடம் மெஹந்தி தலைமையிலான குழு மனு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com