வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியமைப்பது யார் என்பதை உத்தரப் பிரதேசமும், பிகார் மாநிலமும் முடிவு செய்யும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள நகருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அவர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள், பிகாரில் 40 தொகுதிகள், ஜார்க்கண்டில் 14 தொகுதிகள் என மொத்தம் 134 தொகுதிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 115 தொகுதிகள் தற்போது பாஜக வசம் உள்ளன.
சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதால், வரும் மக்களவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் பாஜக தோல்வியடையும்.
மத்தியில் ஆளும் பாஜகவினால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள்(பாஜக), பிகாருக்கும் மக்களை ஏமாற்ற வந்து விட்டனர். ஆர்ஜேடி உடனான கூட்டணியை நிதீஷ் குமார் முறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். பிகாருக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதின் கனவு நிறைவேறியுள்ளது.
வரும் காலத்தில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெறவுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிடியில் இந்த நாடு செல்வதை இந்தக் கூட்டணி தடுத்து நிறுத்தும்.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் உள்ளது. ஏனெனில், சிலரது தனிப்பட்ட நலனுக்காக, அனைத்து அரசு அமைப்புகளும் சேதப்படுத்தப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்களை திணிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்- சமாஜவாதி கூட்டணிக்கு ஆர்ஜேடி ஆதரவு அளிக்கும். இந்தக் கூட்டணி பிகாரிலும் தொடரும் என்று நம்புகிறேன். பாஜகவை வீழ்த்துவற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபடும்.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்- சமாஜவாதி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. எனினும், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் பிறந்த தினம், ஜனவரி 15-இல் கொண்டாடப்படுகிறது. எனவே, அவரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். எதிர்காலத்தில் அவருடைய வழிகாட்டுதல்களைப் பெறுவோம் என்றார் அவர்.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே சமாஜவாதி- பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அந்த அணியில் ஆர்ஜேடி சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல், பிகாரில் ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியுடன் ஜேடியு கூட்டணி வைத்துள்ள நிலையில், அந்த அணியில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









