பாட்னா: தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி நுழைந்திருப்பதால் பாஜகவுக்கு கிடைக்கும் லாபங்களை பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பட்டியலிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான கருத்துகள் எழுந்த நிலையில், சுஷில் குமார் மோடி இது பற்றி கூறியிருப்பது என்னவென்று பார்க்கலாம்.
அதாவது, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் மூலமாக, அவரது கணவர் மீதான மோசடி விவகாரங்களை கையிலெடுக்க வேண்டிய நல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரியங்காவின் வருகைக்காக பாஜக கவலைப்படவில்லை. அவரது வருகையால் எங்களுக்கு பலன் கிடைக்கும் போது நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் எஸ்பி-பிஎஸ்பி கூட்டணிக்கு மிரட்டல் விடுக்கவே பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வாக்குகளைப் பிரிக்க முயலுகிறது காங்கிரஸ். பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்தால் பயனடையப்போவது யார்? பாஜகவைத் தவிர வேறு யாருக்கு இதனால் பயன் ஏற்படும்.
அதில்லாமல், பல மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் வதேராவின் பிரதிநிதியாகவே பிரியங்காவை மக்கள் பார்ப்பார்கள். மத்திய அரசியலில் இதன் மூலம் ராபர்ட் வதேராவின் மோசடிகளும் அம்பலத்துக்கு வரும் என்று கூறியுள்ளார்.