
பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பழுதடைந்த வீடுகளை பொக்லனை மூலம் இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், எம்எல்ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இந்த தாக்குதல் சம்பவம் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றதால், இதனை செய்தியாளர்கள் பதிவு செய்தனர்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதையடுத்து, ஆகாஷ் விஜய்வர்கியா கடந்த மாதம் 26-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும், ஜாமீன் கிடைத்ததையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரமாக கொண்டாடினர்.
இந்த நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜயவர்கியா செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, யாருடைய மகனாக இருந்தாலும், இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக எம்பி ஒருவர் தெரிவிக்கையில்,
"ஆகாஷ் விஜய்வர்கியாவின் அண்மைச் செயல்பாடு மீது பிரதமர் மோடி கோபமாக உள்ளார். ஆகாஷ் சிறையில் இருந்து வெளியே வருவதை வரவேற்கும் அந்தப் பகுதியின் பாஜக அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என்றார். இதுபோன்ற தலைவர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்" என்றார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், மேலும், இதுபோன்ற மோசமான செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.