தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவராக ராகுல் டிராவிட் அறிவிப்பு

ஜூனியர் மட்டத்திலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பொறுப்பு டிராவிட் வசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவராக ராகுல் டிராவிட் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ) தலைவராக முன்னாள் கேப்டனும், இந்தியா ஏ மற்றும் 19 வயது இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது. 

ஜூனியர் மட்டத்திலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பொறுப்பு டிராவிட் வசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், என்சிஏ, மண்டல அகாதெமிகளுக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், காயமுற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உரிச சிகிச்சை போன்றவற்றையும் அவர் கண்காணிப்பார்.

இதனால் இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளின் போட்டிகளுக்கு டிராவிட்டால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்போது பராஸ் மாம்பரே, அபய் சர்மா ஆகிய இருவரும் இரு அணிகளையும் தற்காலிகமாக கையாள்வர் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, என்சிஏ-வின் புதிய தலைவராக ராகுல் டிராவிட்டை 2 ஆண்டுக் காலத்துக்கு நியமித்து சிஓஏ குழு உத்தரவிட்டது. ஆனால், முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளதால் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பதவிக்காலம் வரை இந்தியா சிமெண்ட்ஸ் பணியிலிருந்து ராகுல் டிராவிட்டுக்கு காலவரையற்ற விடுப்பு வழங்கி இந்தியா சிமெண்ட்ஸ் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை நீங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com