கழிவறையில் சமைப்பதில் தவறில்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் இமர்தி தேவி கூறியுள்ளார். அம்மாநிலத்தின் கரேரா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் சிறுவர்களுக்கான உணவை கழிவறையில் சமைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கமளித்து பேசிய அமைச்சர் இமர்தி தேவி,
கழிவறைக்கும் சமைக்கும் பகுதிக்கும் இடையே ஒரு தடுப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிய வேண்டும். ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவரது வீடுகளிலும் குளியலறையுடன் கூடிய கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம ஆட்சேபம் தெரிவித்து உறவினர்கள் நமது வீடுகளில் உணவு அருந்தவில்லை என்றால் நாம் என்ன நினைப்போம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கழிவறை பயன்படுத்தாமல் இருப்பதால் அதன் மூடியின் மீது சமையல் பொருட்களை வைப்பதில் தவறில்லை. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அந்த அங்கன்வாடி மையத்தை தன்னார்வ அமைப்பு பராமரித்து வருகிறது. அங்கு தான் கழிவறை தற்காலிக சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அங்கன்வாடி மையத்தின் அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி தேவேந்திர சுந்தரியால் தெரிவித்தார்.