பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை சில நாடுகள் தங்களின் திட்டமாக கொண்டிருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றஞ்சாட்டினார். மாநிலங்களவை உறுப்பினர் நரேந்திர ஜாதவ் எழுதிய செயற்கை அறிவாற்றல் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நமது அண்டை நாடு உட்பட சில நாடுகள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை தங்களின் திட்டமாக கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் 30 முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இயங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால், அவர்கள் அனைவரும் காஷ்மீரில் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவல் முற்றிலும் தவறானது. ஏனென்றால் பயங்கரவாதிகள் அனைரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை முதலில் இம்ரான் கான் புரிந்துகொள்ள வேண்டும்.
பயங்கரவாத செயல்களால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அவர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.