
இந்தியாவில் மொத்தம் 2,293 கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்ச் 9-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,293-ஆக உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட 59 மாநில கட்சிகளும் அடங்கும்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட இருந்த சூழலில் ஜனவரி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தமாக 149 அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளன.
அவற்றில், தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த புதிய தலைமுறை மக்கள் கட்சி, தெலங்கானாவைச் சேர்ந்த பாரோசா கட்சி, தில்லியைச் சேர்ந்த சப்சி பாடி கட்சி உள்ளிட்டவற்றுடன், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சில கட்சிகளும் அடங்கும்.
இந்த ஆண்டு பிப்ரவரி வரையில் மொத்தம் 2,143 அரசியல் கட்சிகள் தங்களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்திருந்தன. அதில் 58 கட்சிகள் கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிúஸாரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தங்களைப் பதிவு செய்துகொண்டவை.
இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தலில் தங்களுக்கு விருப்பமான சின்னங்களில் போட்டியிட இயலாது. தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்படும் சின்னங்களில் ஒன்றை அந்தக் கட்சிகள் தேர்வு செய்து அதில் போட்டியிடலாம். தற்போதைய நிலையில் அத்தகைய சின்னங்களின் பட்டியலில் 84 சின்னங்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, தேசிய கட்சியாகவோ, மாநில கட்சியாகவோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தை பெற வேண்டும். அல்லது, நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச எண்ணிக்கையிலான தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.