

தானே: ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்துள்ளார்.
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணைய அழற்ச்சி புற்று நோயின் காரணமாக ஞாயிறு இரவு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடலானது திங்கள் மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தற்போது பாஜக அரசுமீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தான போது, மத்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தானேவில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மனோகர் பாரிக்கர் நன்கு படித்த சிந்தனைத் திறனுள்ள ஒரு நபர். ரபேல் ஒப்பந்தத்திற்குப் பிறகு தில்லியில் பதவியில் நீடித்திருப்பது சரியல்ல என்று அவர் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன். எனவேதான் அவர் கோவாவுக்குத் திரும்பியுள்ளார். அவர் மிகவும் சோகமாக உணர்ந்திருப்பார். அவர் தற்போது இல்லாத நிலையில் இதைக் கூறக் கூடாது; ஆனால் ரஃபேல் ஒப்பந்தத்தின் முதல் பலி மனோகர் பாரிக்கர்தான் என்று நான் எண்ணுகிறேன்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எல்லோரும் கடந்த ஒன்றரை வருடங்களாக பேசிக் கொண்டிருக்கிறாரகள். ஆனால் யாரும் பாரிக்கர் மீதுகுற்றம் சாட்டவில்லை. அதுவே அவரது நேர்மைக்கு, அவரை ஊழல் மயப்படுத்த இயலாது என்பதற்கு அத்தாட்சி. ஆனால் அங்கு நடைபெற்றுள்ள ஊழல் அவருக்கு மனக்காயத்தை உண்டாக்கியுள்ளது. அவரது நோயை எதிர்த்துப் போராட அவரை அது அனுமதிக்காமல் அவரைக் கொன்று விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.