
இளைய மகன் தேஜஸ்வி யாதவ், பிகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்த நிலையில், நான் தான் 2-ஆம் லாலு பிரசாத் யாதவ் என அவரின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கூறியதாவது:
எனது தந்தை லாலு பிரசாத் யாதவ் மிகவும் சுறுசுறுப்பானவர், சக்தி மிகுந்தவர். ஒவ்வொரு தினமும் 10 முதல் 12 கூட்டங்கள் வரை பங்கேற்கக் கூடியவர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வெறும் 2 முதல் 4 கூட்டங்களில் பங்கேற்றாலே சில தலைவர்கள் மிகவும் சோர்ந்துவிடுகின்றனர்.
லாலு பிரசாத் யாதவின் ரத்தம் தான் என் உடலில் ஓடுகிறது. அவர் தான் எனக்கு குரு, முன்மாதிரி, கடவுள் எல்லாம். எனவே நான் தான் 2-ஆம் லாலு பிரசாத் யாதவ் என்று தன்னை சுய பிரகடனம் செய்து கொண்டார்.
முன்னதாக, பிகார் கூட்டணி ஆட்சியின் போது லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி, அம்மாநிலத்தின் துணை முதல்வராக செயல்பட்டவர். மேலும் தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திலும் இருந்து வருகிறார். அதேபோன்று தற்போதைய தேர்தல் சூழலில் உடல் நிலையை காரணம் காட்டி பல தேர்தல் பிரசாரங்களை தேஜஸ்வி தட்டிக் கழித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.