புது தில்லி: மாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்களை அண்மையில் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பான தேர்தல் ஆணைய கூட்டங்களில் ஆணையர்களிடையே பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டாலும், தான் தெரிவித்த மாற்றுக கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை என்று மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கு லவாசா கடந்த 4-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தேர்தல் நடத்தை நெறிமீறல்கள் தொடர்பாக நடைபெறும் கூட்டங்களில் அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இதுதொடர்பாக இனி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து லவாசாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "இது தேர்தல் ஆணையத்தின் உள்விவகாரம் தொடர்புடையது. எனவே, எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் ஆணையர்கள் மூவரும் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
இதுபோன்று கடந்த காலங்களிலும் பலமுறை ஏற்பட்டுள்ளது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதும் அவசியமே. அது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட முடியவில்லை எனில், பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்.
இதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களிலும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 21-ஆம் தேதி மூன்று தேர்தல் ஆணையர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாற்றுக் கருத்தை பதிவு செய்வது தொடர்பான தேர்தல் ஆணையர் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாயன்று தில்லியில் நடைபெற்ற முழுமையான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.