கங்கை நதி நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தகுதியற்றது என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஜீவ நதிகளில் ஒன்றாக கங்கை நதி விளங்குகிறது. இந்த புணித நதியில் குளிப்பதால் பாவங்கள் அனைத்தும் விலகுவதாக தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வருகின்றது.
கங்கை நீரின் தன்மையைக் குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில்..
உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் கங்கை நீர் ஓடுகிறது. சி.பி.சி.பீ(CPCB) சமீபத்தில் நடத்திய ஆய்வில் கங்கை நீரில் நோய் பரப்பும் ஒருவித நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல எனக் கூறியுள்ளது.
கங்கை ஆற்றங்கரையில் 86 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வெறும் 7 இடங்களில் மட்டும் சுத்திகரிப்புக்குப் பின் குடிக்கப் பயன்படுத்தவும், 18 இடங்களில் குளிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மற்ற இடங்களில் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ பயன்படுத்த முடியாத அளவிற்கு நுண்கிருமிகள் பரவி இருக்கின்றது.
கங்கை நீர் மாசடைவதைத் தடுக்க பசுமை தீர்ப்பாயம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கங்கை தூய்மை பணியில் மத்திய நீர்வளத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்காக "நமாமி கங்கா" என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
ஒரு காலத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து ஏற்படும் கழிவுகள் கங்கை நீரில் நேரடியாகக் கலந்துவந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள கங்கை நீர் ரசாயனம் மிகுந்து கருப்பாகத் தோற்றமளித்தது.
ஆனால், நமாமி திட்டத்தைக் கொண்டுவந்த பின், தொழிற்சாலை கழிவுகள் நேரடியாகக் கலப்பதை நிறுத்தப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறைச் செயலர் மிஸ்ரா கூறியுள்ளார்.
கங்கை தூய்மை பணியில் மகிழ்ச்சியடையும் அளவுக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தூய்மைப்படுத்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டும் கங்கை நீரைத் தூய்மைப்படுத்த முடியாது. இதில் மக்களின் பங்கு மகத்தானது என்று அவர் கூறியுள்ளார்.