தனது தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பாகும் என்று மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தார். இது தொடர்பான மசோதா மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு தீர்மானம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது ட்விட்டர் கணக்கையும் மகள் இல்திஜா தான் பயன்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீநகர் துணை ஆணையருக்கு இல்திஜா கடந்த மாதம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் தாயார் மெஹபூபா முப்தியை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் முப்தியின் ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு மாதத்திற்கு முன்னதாகவே எனது தாயார் முப்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துணை ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது நடந்ததாகத் தெரியவில்லை. எனது தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பாகும்' என்று பதிவிட்டுள்ளார்.