

தனக்கு 50 வயது நிறைவடைந்த பின்னரே, மீண்டும் சபரிமலை கோவிலுக்கு வர இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளத்திலே பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளிக்க இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதன் தொடர்ச்சியாக, பெண்கள் பலர் சபரிமலை கோவிலுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சபரிமலைக்குச் சென்ற 9 வயது சிறுமி கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறுமி தனது கழுத்தில் ஒரு பலகையை தொங்கவிட்டுள்ளார். அதில், 'இப்போது எனக்கு 9 வயது. எனக்கு 50 வயது ஆனதும் மீண்டும் கோவிலுக்கு வருவேன். அதுவரை காத்திருக்கிறேன்' என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
தனது தந்தை ஹரிகிருஷ்ணனுடன் ஒன்பது வயது ஹிருத்ய கிருஷ்ணா என்ற சிறுமி தற்போது சபரிமலை கோவிலுக்குச் சென்றுள்ளார், மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவிலின் மரபுப்படி, 50 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே நான் கோவிலுக்கு வர முடியும். சபரிமலை கோவிலின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பலகையை கழுத்தில் அணிந்துள்ளேன்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.