

கேரளாவில் காதலிக்க மறுத்ததால் 12ம் வகுப்பு மாணவி ஒருவரை தீ வைத்து எரித்துக் கொலை செய்து இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கக்கநாடு அருகே அதானியில் வசித்து வருகிறார் தேவிகா அகா பாரு(Devika Aka paru). இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் நகரைச் சேர்ந்த மிதுன் என்பவர், தேவிகாவின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு வந்துள்ளார். தேவிகா வீட்டின் கதவைத் தட்ட, தேவிகாவின் தந்தை கதவைத் திறந்துள்ளார். அப்போது, தேவிகாவை உடனடியாக பார்க்க வேண்டும் என்று மிதுன் கூறியுள்ளார். தேவிகாவின் தந்தை எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காததால் தேவிகாவை அழைத்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியே வந்த தேவிகா மீது அருகில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் மிதுன். மேலும், தானும் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். மகளைக் காப்பாற்றச் சென்ற தந்தை காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது தேவிகாவின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் தேவிகாவை மிதுன் கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கேரளாவில் சொத்தை அடைவதற்காகவும், விரும்பியவரை திருமணம் செய்துகொள்வதற்காகவும், தனது கணவரின் குடும்பத்தார் 6 பேரை சயனைடு கொடுத்து ஜோலி என்ற பெண் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காதல் என்ற பெயரில் மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.