வீர சாவர்க்கரைப் பின்பற்றியவர்தான் முன்னாள் பிரதமர் இந்திரா: பேரன் ராஜ்நீத் சாவர்க்கர் அதிரடிப் பேட்டி

வீர சாவர்க்கரைப் பின்பற்றியவர்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அவரது அனைத்து கொள்கை முடிவுகளும் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கு முற்றிலும் எதிரானது. 
வீர சாவர்க்கரைப் பின்பற்றியவர்தான் முன்னாள் பிரதமர் இந்திரா: பேரன் ராஜ்நீத் சாவர்க்கர் அதிரடிப் பேட்டி
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பாஜக வெளியிட்ட மகாராஷ்டிர தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரன் ராஜ்நீத் சாவர்க்கர் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வீர சாவர்க்கரைப் பின்பற்றியவர்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. தபால் தலை வெளியிட்டு சாவர்க்கரை பெருமைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளார். அணுஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளார். ஏனென்றால் அவரது அனைத்து கொள்கை முடிவுகளும் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கு முற்றிலும் எதிரானது. 

அசாதுதீன் ஓவைஸி, சாவர்க்கரைப் பின்பற்றி நடக்க வேண்டும். ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு சமூகநலவாதியை காண முடியாது. சாதி, மதம் என அனைத்தையும் தன் வீட்டோடு வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் நுழையும் போது அனைவரும் இந்தியராக ஒன்றிணைய வேண்டும் என முழங்கியவர். 

சாவர்க்கரின் ஹிந்துத்துவக் கொள்கைகளை காங்கிரஸ் எதிர்ப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். மகாத்மா காந்தியின் வழியில் நடந்த இந்திரா காந்தி அல்லது ஒரே ஒரு காங்கிரஸ்காரரையாவது அடையாளம் காட்ட வேண்டும். அவ்வாறு இயலவில்லை என்றால், ஹிந்துத்துவம் குறித்து மன்மோகன் பேச வேண்டாம். ஏனென்றால் சாவர்க்கர் பெரிய தலைவர் என்பதை நீங்களும் தான் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். அதனால் தான் இந்திராவும் அவரை கௌரவித்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவரை கௌரவிக்க நினைக்கிறார். அதை யாரும் தடுக்க வேண்டாம்.

சாவர்க்கர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அனைத்து சாட்சிகளும், ஆதாரங்களும் உள்ளன. அவர் குறித்து தேவையற்ற அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளது. தைரியம் இருப்பவர்கள் சாவர்க்கர் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? அதற்கான இடத்தையும், நேரத்தையும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். விவாதிக்க நான் எப்போதும் தயார்.

நல்லவேளையாக சாவர்க்கருக்கு பின்வாசல் வழியாக பாரத ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது. எனவே இதில் விருப்பம் இருந்தால் பொதுமக்கள் வாக்களித்து பாஜக-வை வெற்றிபெற வைக்கட்டும். விரும்பவில்லை என்றால் தோற்கடிக்கட்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com