

தங்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநில மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி.மகளிர் கல்லூரி உள்ளது. இது மகளிர் கல்லூரி என்பதால் பாதுகாப்பு கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். கல்லூரிக்கு வெளியே உள்ள சாலையில் போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.
கல்லூரியின் தலைவி ஹீனா என்பவர் பேசுகையில், 'இதுவரை இந்தக் கல்லூரியில் மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், உள்கட்டமைப்பு மற்றும் போதிய வசதிகள் இல்லாத மற்ற கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் பேரில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது மாணவிகளின் தனியுரிமையை பாதிக்கும். மேலும், மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த முடிவை பல்கலைக்கழகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்கலைக்கழகம் இதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ஆனால், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு வெவ்வேறு நேரங்களில் வகுப்புகளை நடத்துவது குறித்து கல்லூரி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.