ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இரு மாநில முதல்வர்களுமே முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ஆளும் பாஜக கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத்த தொகுதிகளில் பாஜக 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. அதேபோன்று மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 175 மற்றும் காங்கிரஸ் 91 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் இருவருமே முன்னிலை வகித்து வருகின்றனர். தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்திலும், மனோகர் லால் கட்டர் 14,000 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருக்கின்றனர்.