மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது காஷ்மீர் பயணம் குறித்த அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, அங்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு கைது செய்தது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தரிகாமி மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தரிகாமியின் உடல்நிலை சரியாக இல்லாததால், தான் அவரைக் காண வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கும் தரிகாமியைச் சந்திப்பதற்கும் யெச்சூரிக்கு அனுமதி வழங்கியது. எனினும், தரிகாமியைச் சந்திப்பதைத் தவிர யெச்சூரி மற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீர் சென்று திரும்பிய சீதாராம் யெச்சூரி தனது காஷ்மீர் பயணம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.