புது தில்லி: ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட நால்வரை திருத்தப்பட்ட 'உபா' சட்டத்தின் கீழ் தனிநபர் பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை புதனன்று வெளியிட்டுள்ள கெஜட் அறிவிப்பின்படி, பயங்கரவாத நவடிக்கைகைள் தடுப்புச் சட்டம் - 1967 (திருத்தப்பட்டது) பிரிவு 35 , உள்பிரிவு 1 (1) ன் படி, ஹபீஸ் சையத், மசூத் அசார், சகிர் உல் ரஹ்மான் லக்வி மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகிய நால்வரும் தனிநபர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவானது இயக்கங்களுக்குப் பதிலாகத் தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் மசூத் அசார் மீது புல்வாமா தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட ஐந்து தீவிரவாத வழக்குகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது.
ஹபீஸ் சையத் மீது 2008 மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட நான்கு தீவிரவாத வழக்குகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது.
அதேபோல ஹபீஸ் சையத்தின் தளபதியான ரஹ்மான் லக்வி மீதும் மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட நான்கு தீவிரவாத வழக்குகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது.
இறுதியாக மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மீது 1993 மும்பை குண்டு வெடிப்புச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் முன்னுரிமை அடிப்படையில் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறையி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்