வழிப்பறியில் ஈடுபட்ட நபரை விரட்டிப் பிடித்த தாய்-மகள்!

தில்லியில் தங்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்களை தாயும், அவரது இளம் வயது மகளும் விரட்டிப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட நபரை விரட்டிப் பிடித்த தாய்-மகள்!
Published on
Updated on
1 min read

தில்லியில் தங்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்களை தாயும், அவரது இளம் வயது மகளும் விரட்டிப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.  
சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் வழிப்பறி சம்பவம் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. திருட்டுகளையும், வழிப்பறிகளையும் தடுப்பதாக காவல்துறை அறிக்கைவிட்டபோதிலும் செல்லிடப்பேசி, சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களை முழுமையாக தடுத்து நிறுத்த முடிவதில்லை. சம்பவம் நிகழ்ந்த பிறகு தனிப்படைகள் அமைத்து தேடுவதைவிட, சம்பவம் நிகழாமல் இருக்க ரோந்துப் பணிகளை போலீஸார் ஏன் துரிதப்படுத்தக் கூடாது என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடர்களை தாயும், மகளும் விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: 
தில்லி நாங்லோய் பகுதியில் சம்பவத்தன்று மதியம் ஒரு பெண்மணி, தனது மகளை நடன வகுப்புக்கு அனுப்புவதற்காக ரிக்ஷாவில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது, தலைக்கவசம் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 
அவர்களில் ஒருவர், பெண்மணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், தனது மகளுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்றனர். மேலும், அப்போது, மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றவர் நிலை தடுமாறினார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை தாயும், மகளும் இறுகப்பிடித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். சங்கிலியும் மீட்கப்பட்டது. வாகனத்தை ஓட்டிவந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதன் பின்னர், சங்கிலியைப் பறித்தவர் அளித்த தகவலின் பேரில் தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இருவரும் தில்லியைச் சேர்ந்த அப்துல் ஷம்சத் (32), விகாஷ் ஜெயின் (38) ஆகியோர் என்பதும், போதைப் மருந்து வாங்குவதற்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com