ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தில் 370 மருத்துவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு இன்னும் இயல்பான நிலை திரும்பாமல் உள்ளது. எனவே, மத்திய அரசு இதைச் செயல்படுத்தியதற்காகவும், இதைச் செயல்படுத்திய விதத்திற்காகவும் பல்வேறு விமரிசனங்களை இன்றைக்கும் எதிர்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கம்: அரசாணை வெளியீடு
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத்தில் 370 மருத்துவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து குஜராத் பாஜக மாநிலத் தலைவர் ஜித்து வகானி தெரிவிக்கையில், "சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டதற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், 370 மருத்துவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இது சமுதாயத்துக்கு நேர்மறையான சமிக்ஞையை தெரிவிக்கிறது" என்றார்.
மருத்துவர்கள் பாஜகவில் இணைந்ததற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விடியோ செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.