முத்தலாக் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on
Updated on
1 min read


முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை உடனடியாக தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் சட்டம் இயற்றியது.
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்-2019 என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் புதிதாக பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் இந்த மனுவும் சேர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்பே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், முத்தலாக் தடைச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களை மீறும் வகையில் உள்ளது. எனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை, சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com