சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை, சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றி, தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாத இறுதியில் ஓ.பி.சைனி ஓய்வுபெறவிருக்கிறார். எனவே, 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மற்றும் நிலுவையில் உள்ள இதர விவகாரங்கள் அனைத்தும் அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இனி சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் விசாரிப்பார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியான அஜய் குமார் குஹர், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை ஏற்கெனவே விசாரித்து வருகிறார். இதுதவிர, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள், ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் உள்ளிட்டோர் தொடர்புடைய வழக்குகளையும் அவர் விசாரித்து வருகிறார்.
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, ஓ.பி.சைனி கடந்த 2017-இல் தீர்ப்பளித்தார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அவர் அண்மையில் முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.