ஜம்மு-காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் உள்ள வார்போரா எனுமிடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த 4 பயங்கரவாதிகள் காருக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி முழுவதும் டான்ஸீம் என்ற கோஷத்துடன் கூடிய முழு அடைப்புக்கு பிரிவினைவாதக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், குபுவாரா மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் அகமது கான் என்பவர் அப்பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த காரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய 4 பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் பஷீரை வெளியேறுமாறு கூறி அவரை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். டான்ஸீம் முழு அடைப்புக்கு ஆதரவளிக்கவில்லை எனக் கூறி அவரது காரையும் தீயிட்டு எரித்தனர். மேலும் பஷீரை அங்கிருந்து ஓடுமாறு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் விரைவதற்குள், பயங்கரவாதிகள் தப்பிச்சென்றுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் போராடியும் அந்தக் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக வார்போரா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.