திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 சிம் கார்டுகள், 3 மொபைல் ஃபோன்கள், மெமரி கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 9-ஆம் தேதி தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், அல்-காய்தா மற்றும் சிமி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அன்சாருல்லா என்ற இயக்கத்தை அமைக்க முற்படுவதாகவும் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க தயாராகி வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் மூலம் திருநெல்வேலியில் உள்ள திவான் முஜிபுருக்கும் தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டின் பேரில், வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் உள்ள திவான் முஜிபுர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் 4 சிம் கார்டுகள், 3 மொபைல் ஃபோன்கள், ஒரு மெமரி கார்டு உள்ளிட்ட பொருட்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை என்ஐஏ அதிகாரிகள், சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பித்து, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவுள்ளனர்.