அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும், காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவும் "ஊக்குவித்தார்" என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் சந்தித்தனர். இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக மோடி இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர்களின் நான்காவது சந்திப்பு இதுவாகும்.
அவர்களின் 40 நிமிட கலந்துரையாடலில், முக்கியமாக இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அதிபர் நல்ல முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார்.
"கூடுதலாக, பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும், காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றவும் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் ஊக்குவித்தார்" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானில் இருந்து வலுவான எதிர்வினைகளைத் தூண்டியது.
காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது, ஆனால் 370 வது பிரிவை ரத்து செய்வது தங்களது "உள்நாட்டு விஷயம்" என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறிவருகிறது குறிப்பிடத்தக்கது.