பாஜகவின் முன்னாள் அமைச்சரும், மூத்தத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய உ.பி. மாணவி, மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் .
அந்த மாணவி, தனது வீட்டிலிருந்து உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் இன்று காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சிறப்பு விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.
மாணவி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டதில் இருந்து பாதுகாப்பு கோரிய அவரது மனுவை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"எங்கள் மனு ஒப்புக் கொள்ளப்பட்டதால் இது எங்களுக்கு ஒரு பெரிய நிவாரணம்" என்று அவரது வழக்கறிஞர் அனூப் திரிவேதி செய்தியாளர்களிடம் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியது.
கடந்த வாரம் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சின்மயானந்த், தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த மாணவி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையே, சின்மயானந்தின் ஜாமீன் மனுவை ஷாஜகான்பூர் தலைமை நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை நிராகரித்தார்
நெஞ்சு வலி ஏற்பட்டதாக சின்மயானந்த் கூறிய நிலையில், அவர் லக்னோவின் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தன்னை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக சுவாமி சின்மயானந்த் தரப்பில் மாணவி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாணவியும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.