கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார். அவருக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதற்காக விமான நிலையத்தின் வெளியே நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி கௌரவிக்கப்பட்டார்.
இதன்பிறகு பேசிய பிரதமர் மோடி,
"இங்கு அதிக அளவில் வந்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரவேற்பு மறக்க முடியாத ஒன்றாகும். இந்த தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நான் தலை வணங்குகிறேன். 2014-இல் நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐ.நாவுக்குச் சென்றேன். தற்போதும் அங்கு சென்றேன். இந்த 5 ஆண்டுகாலத்தில் நான் மிகப் பெரிய மாற்றத்தைப் பார்த்தேன். இந்தியாவுக்கான மதிப்பும், இந்தியா மீதான ஆர்வமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதற்கு 130 கோடி இந்தியர்கள்தான் காரணம்.
ஹூஸ்டன் நகரில் "ஹௌடி மோடி" நிகழ்ச்சி பிரமாண்டமாக இருந்தது. அதிபர் டிரம்ப் பங்கேற்றிருந்தார். இதோடு அமெரிக்கா, டெக்ஸாஸ் மற்றும் ஹூஸ்டன் நகரில் இருக்கும் இந்தியர்கள் தங்களது இருப்பை வெளிப்படுத்திய விதம் தனித்துவமாக இருந்தது.
3 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் 28-ஆம் தேதி, இந்திய ராணுவ வீரர்கள் துல்லியத் தாக்குதலை நடத்தி உலகுக்கு இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தினர். அதை இன்றைய இரவில் நினைவுகூறி, நமது துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்" என்றார்.