
நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இத்துடன் 6ஆவது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019 மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.