
பிரதமருக்கு சட்டத்தின் அடிப்படையான விஷயங்கள் கூட தெரியவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கோவையில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தபோது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) இடம்பெற்றிருந்தார். இது அதிர்ச்சியளிக்கவில்லை. அதையெல்லாம் விட ஜாமீன் கிடைப்பதே அவருக்கு முக்கியமான விஷயம் என்று கூறியிருந்தார்.
ஐ.என்.எஸ். மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றதை விமர்சிக்கும் வகையில் இந்தக் கருத்தை மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் பேச்சுக்கு சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், மோடியின் ஆட்சியில் முதலில் குற்றவாளி என தீர்ப்பு வந்துவிடும். அதற்குப் பிறகுதான் விசாரணையே நடைபெறும். மோடியின் ஆட்சியில், ஒருவர் தான் அப்பாவி என நிரூபிக்கும் வரையில் குற்றவாளிதான்.
சட்டதிட்டங்கள் குறித்து பிரதமருக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், அவரது நண்பர் அருண் ஜேட்லியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் அடிப்படை விதிகள் குறித்து பிரதமருக்கு சட்டத்துறை செயலாளர் கற்பிக்க வேண்டும்.
ஜாமீன் என்பது சட்ட உரிமை என்றும், சிறை என்பது விதிவிலக்கானது என்றும் உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு தெரிவித்திருக்கிறது.