காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டது. தில்லியிலும் கூட்டணி அமைக்க எங்களுக்கு விருப்பமில்லை. இருப்பினும், ஹரியாணாவில் 4 தொகுதிகள், பஞ்சாப்பில் 5 தொகுதிகள், தில்லியில் 4 தொகுதிகள் வரை ஆம்ஆத்மி கேட்கிறது.
இருப்பினும் கூட்டணி என்ற பேச்சுக்கே மாநில காங்கிரஸ் தயாராக இல்லாத சூழலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி அமைவது சிரமம்தான். மாநில காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தில்லியில் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைத்தால் மட்டுமே தில்லியிலும் கூட்டணி என்று ஆம்ஆத்மி தெரிவித்துவிட்டது. தில்லியில் மட்டும் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். தில்லியில் அவர்கள் கேட்ட 4 தொகுதிகளையும் ஒதுக்கவும் அவர் ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால், அரவிந்த் கேஜரிவால் தான் தன்னுடைய முடிவுகளில் திடீர் பல்டி அடித்து வருகிறார்.
எனவே நேரம் குறைந்து வருவதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம்ஆத்மி தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.