
""பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எனது பழைய நண்பர்; தேவைப்பட்டால் அவருடன் மீண்டும் பேசுவேன்'' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யும், நடிகையுமான மூன் மூன் சென் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: இம்ரான் எனது பழைய நண்பர் ஆவார். இதுதவிர்த்து வேறு எதிலும் நாங்கள் தலையிட்டதில்லை. ஆனால், நாட்டில் தற்போது நடைபெறும் பிரிவினை அரசியல் (பாகிஸ்தானை தொடர்புப்படுத்தி பேசப்படும் தேசியவாதம்) மிகவும் ஆபத்தானதாகும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவு ஏற்படுத்த இம்ரான் கானிடம் தேவைப்பட்டால் நான் பேசுவேன். பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகள் இடையே நமது நாட்டுக்கு சிறப்பான மதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், இந்தியாவில் நிலவும் பிரச்னைகளை அவர் மறந்து விட்டார் என்றார்.
கடந்த 1980, 1990ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நட்சத்திரமாக இம்ரான் கான் திகழ்ந்தபோது, அவரின் நெருங்கிய நண்பராக மூன் மூன் சென் அடையாளம் காணப்பட்டார். அவர்கள் இருவரிடையேயான நட்பு குறித்து பத்திரிகைகள், வார இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.