
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்விலிருந்து நீதிபதி என்.வி.ரமணா விலகியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிமன்ற அமர்வு அமைக்கப்படும் என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்திருந்தார். இந்த அமர்வில், நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெறுவர் என நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அமர்வில் நீதீபதி என்.வி.ரமணா இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலியல் புகார் தெரிவித்திருந்த பெண், நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் ஒன்றை புதன்கிழமை அனுப்பியிருந்தார்.
அதில் அவர், "நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நெருங்கிய நண்பர் ஆவார். நீதிபதி கோகோயின் வீட்டுக்கும் அவர் அடிக்கடி சென்றுவருவார். தலைமை நீதிபதியின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் நான் பணியமர்த்தப்பட்டிருந்ததால், இது எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்வில் பெண் நீதிபதிகளே பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையும் இதில் பின்பற்றப்படவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இந்தப் பாலியல் புகார் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து என்.வி.ரமணா தாமாக விலகியுள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது, அவரது இடத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.