
பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
இந்த நிலையில், பொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 66 அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை எனவும் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.