புவனேஸ்வர்: இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.
எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமியப் பெண்களைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரின் சர்ச்சைப் பேச்சால் ஒடிஷா சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.
ஒடிஷா சட்டப்பேரவையில் வியாழனன்று விவாதத்தில் அவசர கதியில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இதற்கு பதிலளித்து அவையின் பூஜ்ய நேரத்தில், ஒடிஷா சட்டப்பேரவை பா.ஜ.க. அவை துணை தலைவர் பி.சி. சேத்தி பேசினார். அவர் தனது பேச்சில்; ஆய்வறிக்கைகள் சிலவற்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.
அவர் தனது பேச்சில், 'மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர்' என்று பேசினார். இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜே.டி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.
ஆனால் அதற்கு பதிலளித்த சேத்தி, 'தான் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக விரோதம் காட்டும் வகையில் எதுவும் பேசவில்லை. ஆய்வு அறிக்கைகளை அவையில் மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? ' என்று வினவினார்.
அவரது பேச்சில் உறுப்பினர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில், சேத்தியின் பேச்சு ஆய்வு செய்யப்படும் என்று சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ அவையில் தெரிவித்தார்.