ஒமர், மெஹபூபாவின் கைது, ஜனநாயகத்துக்கு விரோதமானது: ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோரை கைது செய்திருக்கும் அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டதையடுத்து, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,
"காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த முடிவு குறுகிய பார்வை கொண்ட முட்டாள்தன முடிவாகும். இதன்மூலம், தலைமை வெற்றிடத்தைக் கைப்பற்ற பயங்கரவாதிகளுக்கு இது வழிவகுக்கும். சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்" என்றார்.
இதேபோல், சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது மீதான விவாதத்தின்போது, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குறித்து தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஃபரூக் அப்துல்லா அவருடைய விருப்பத்தின் பேரில்தான் வீட்டில் இருக்கிறார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை" என்றார்.
இந்த நிலையில் காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "என் வீட்டின் வெளியே டிஎஸ்பி பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனால், யாரும் வெளியே போக முடியவில்லை, யாராலும் உள்ளே வர முடியவில்லை. இப்படி இருக்கையில் அமித் ஷா எப்படி பொய் பேசுகிறார் என்று தெரியவில்லை" என்றார். இதன்மூலம், ஃபரூக் அப்துல்லாவும் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.