புது தில்லி: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நாளை ஸ்ரீநகருக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த இந்தியா, அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அறிவிப்பிற்குப் பிறகு காஷ்மீரின் நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக சென்ற குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தில்லிக்கு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு சனிக்கிழமையன்று செல்கின்றனர் என தகவல் வெளியானது.
இவர்களுடன் காங்கிரசின் ஆனந்த் சர்மா, சிபிஐ கட்சியின் ராஜா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் உடன் செல்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.