

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை ரஷியா சென்றார். இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அவர், ரஷியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்தும் முடிவு செய்யவுள்ளார்.
அரசு முறை பயணமாக ஹங்கேரி சென்ற ஜெய்சங்கர், அங்கு தனது பயணத்தை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பிரதிநிதிகள் வரவேற்றனர்.
வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின், ரஷியாவுக்கு ஜெய்சங்கர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ராவைச் சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ரஷியாவின் கிழக்கு பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஆண்டுதோறும் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவிருக்கும் அமைச்சர், மாநாட்டுக்கு செல்லும் மோடியின் பயணம் குறித்து முடிவு செய்யவுள்ளார்.
அதையடுத்து, துணை பிரதமர் யூரி போரிசாவையும் சந்தித்து பேசும் அவர், இந்திய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக இந்தியாவின் கொள்கைகள் குறித்து வால்டாய் விவாத கிளப்பில் உரையாற்றுகிறார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு ரஷியா தலைமை தாங்கவுள்ளதால் அது குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.