சுபால் (பாட்னா): காஷ்மீர் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சகோதரர்களான பிகார் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ராம்விஷ்ணுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பர்வேஸ் ஆலம் மற்றும் தர்வேஜ் ஆலம். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் தச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.
அப்போது அங்கு உள்ள சகோதரிகள் இருவர் மீது அவர்கள் காதல் வயப்பட்டனர். பின்னர் அந்தப் பெண்களுடன் தங்களது சொந்த ஊரான ராம்விஷ்ணுபூர் கிராமத்திற்கு வந்து விட்டனர். இங்கே சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்குத் திருமணம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீர் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சகோதரர்களான பிகார் இளைஞர்கள் இருவரும் காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் போலீசாரிடம் தனது பெண்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிகார் போலீசாரின் உதவியுடன் காஷ்மீர் போலீசார் இந்த இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தகவலை சுபால் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.