ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
லடாக்கின் லேஹ் பகுதியில் நடைபெற்ற விவசாய - ராணுவ அறிவியல் மாநாட்டை அவர் துவக்கி வைத்துப் பேசினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் லடாக் பகுதிக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தின்போது லடாக் பகுதி மக்களையும், அங்குள்ள முக்கிய நபர்களையும் சந்திக்கவிருக்கும் ராஜ்நாத் சிங், அந்தப் பிராந்தியத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு குறித்தும், அது அவர்களுக்கு எத்தகைய பலனை தரும் என்பது குறித்தும் உரையாட இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து அங்குள்ள பாதுகாப்புப் படை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.