நாடு முழுவதும் 12 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தலைநகர் தில்லியில் உள்ள ஆயுஷ் அமைச்சகத்தில் யோகா விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது 10 ஆயுஷ் சுகாதார நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
நாடு முழுவதும் 12 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக நடப்பாண்டில் 4 ஆயிரம் ஆயுஷ் நிலையங்கள் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே தேசம், ஒரே வரி மற்றும் ஒரே ரேஷன் அட்டையின் அடிப்படையில் அனைவருக்கும் ஒரே மருத்துவ சேவை எனும் நோக்கத்தில் ஆயுஷ் திட்டத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1.5 லட்சம் சுகாதார நிலையங்கள் துவங்கப்பட உள்ளன.
ஆயுஷ் திட்டத்தில் பழமையான மருத்துவ முறையில் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டியது அவசிமாகிறது. இதற்கு தேவையான நபர்களை இணைத்து செயல்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.